செவலை- சிறுகதை
1 அருகு கூட முளைத்திடாத இறுகிய வரப்பின் மீது நகர்ந்த சாரையின் தோலில், காய்ந்த வயலில் ஊர்ந்த சாணி வண்டுகளின் கரங்களில், கறுமையேறி வெம்பி வீழ்ந்த நுணாப் பழத்தின் சதைப்பற்றில், கூடி வந்த இரவில்,கோபியின் பாத வெடிப்புகளில் நுழைந்துத் தங்கியிருந்த வண்டல் மண் துகளில், எதில் தான் மீதமில்லை? அன்றைய பகலின் கருணையற்ற உஷ்ணம். தாடிமயிர் கழுத்துவரை படர்ந்து, குடல் உருவும் பிச்சுவாக் கத்தியைப் போல் நீண்ட வளைந்தக் கொம்புகளையுடைய அந்த செவலைக் கிடா தொலைவில் தெரிந்தப் பட்ட மரம் ஒன்றை நோக்குவது போல் படுத்திருந்தது. அதன் பார்வையில் ஒளி குன்றியிருந்து. அதனுடைய வயிறு ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி கோபி நீண்ட நேரமாக அங்கு நின்றிருந்தான். ஆட்டின் காதின் மீது வந்தமர்ந்த பூச்சி ஒன்றினை கையில் வைத்திருந்தத் தொரட்டிக் கம்பினால் தட்டிவிட்டான். அந்த செவ்வாட்டின் முகம் இப்போதெல்லாம் அவனுக்கு வயது முதிர்ந்த மனிதன் ஒருவனின் முகத்தை நினைவூட்டுகிறது. பெருசு என்று தான் அதை அவன் அழைக்கிறான். திருவாடானை இடையன் வயலில் இருக்கின்ற சுப்பிரமணியனுக்குச் சொ